Tuesday, July 28, 2015


தொங்கநாதன்……..2

காய்ந்த குளத்து கருவேல மரத்தில் தொங்கும் ஒற்றைக்கூடு


                தொங்கநாதன் எனும் தூக்கணாங்குருவி கருவேல மரம் அடர்ந்த காய்ந்து போன குளத்தில் உள்ள நான்கு மரங்களில் தொங்கநாதன் கூடு தொங்க விட்டுருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அதுவும் முழுமையடையாமல் இருந்தன. பத்தடி உயரத்தில் மரத்துக்கு ஒன்றாகத்தொங்கின.இது எனக்கு பேராச்சர்யமாக இருந்தது. இது வரை நான் கண்டது கூடுகள் நீரோடும் ஆற்றுக்கு மேல் அல்லது கிணற்றுக்கு நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும். வேம்பு, அத்தி, சீனிப்புளி போன்ற கரையிலுள்ள மரங்களில் இருந்து யாரும் தொடமுடியாத நிலையில் நீருக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும். வரண்ட குளத்தில் கருவேலமரத்தில் ஒற்றை அரைகுறை கூடுகளைப்பார்த்த போது இது புது கண்டுபிடிப்பு தாம் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். இது வரை பதிவாகாத செய்தி. ஒருவேளை கிணற்றின் நடுவில் கட்டுவதற்கு முன் இந்த மாதிரி இடத்தில் கட்டிப்பழகுவதாகக்கூட இருக்கலாம். வெண்தொண்டை தினைக்குருவி தொங்கநாதன் குஞ்சு பொரித்து விட்ட கூடுகளை தன் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பது பற்றி டாக்டர் சலீம் அலி பதிவு செய்திருக்கிறார். அத்தோடு எனது Diary on the nesting behavior of Indian Birds நூலில் சிட்டுக்குருவியும் இந்த தினைக்குருவி போல எல்லாம் முடிந்து போன வெற்றுக்கூட்டை தன் இனப்பெருக்கத்துக்கு பயன் படுத்துவதை பதிவு செய்துள்ளோம். இப்போது மேலும் ஒரு செய்தி என்னவெனில், வெண்தொண்டை தினைக்குருவி முட்டைகளுக்கு மெத்தை வைக்க உதிர்ந்த இறகை தனது வாயில் கவ்விச்சென்றதை கண்ணுற்றேன். தினைக்குருவிகள் மற்றும் சிட்டுக்குருவிகள் கூட்டை கைப்பற்ற வரும் போது தொங்கநாதன் அவைகளைத்துரத்தி அடிக்கின்றன. அணில் கூடுகளுக்குப்பக்கம் சுற்றுவது முட்டை, குஞ்சுகளை கைப்பற்றத்தான் என்பது தெளிவு. தொங்கநாதன் தானியங்களையும், பூச்சிகளையும் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவது அதன் அலகில் சிக்குண்டு இருப்பதை வைத்து பதிவு செய்ய முடிகிறது. தினைக்கருவிகள் பல கூட்டில் குடியேறுவதற்கு முன்பு அதை சுற்றி பார்வையிடுகின்றன. ஒன்றிரண்டு கூடுகள் இரட்டையாக பின்னப்பட்டு ஒன்றிலிருந்து இன்னொன்று தொங்குகிறது.சாதாரணமாக ஒன்னரையடியாக இருந்தால் இந்தக்கூடு மூன்றடியாக உள்ளது. அருகிலிருக்கும் தென்னை மரத்தின் ஓலை, சோளத்தட்டின் ஓலை என இவற்றை அலகில் பூக்கட்டக்கிழிக்கும் நாறு போல கிழித்து அலகில் கூட்டைப்பின்னலிட்டு நெய்வது கண்கொள்ளாத காட்சி.கூட்டின் அருகில் கருந்தலை தினைக்குருவிகளைக்கண்டேன். சிட்டுக்குருவி. மைனா கிணற்றுக்குள் போய், வந்து கொண்டிருக்கிறது. அது கிணற்றுச்சுவர் பிளவுகளில் முட்டை வைக்கும். அது கண்ணில் பட வில்லை. அமைதியான கிராமத்து 86 வயது பழனிக்கவுண்டர் மனைவியை இழந்தவர், எனக்காக கூட்டை நான்கு கிணறுகளில் கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை நெகிழ வைத்தது. பழைய துறுப்பிடித்த சைக்கிளில் காற்றுடன் போராடி பெடலை அமுக்கி தெற்கும் வடக்கும் அலைந்து கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை வியப்புக்குள் தள்ளியது. ……………..தொடரும்.


Sunday, July 19, 2015


தொங்கநாதன்


தொங்கநாதன்

தொங்கநாதன் எனில் தூக்கணாங்குருவி என வட்டாரத்தமிழ் சொல்கிறது. இதன் வாழ்க்கை  மர்மங்கள் பல கொண்ட சினிமாப்படம் போல இருக்கும். அதைப்படித்து அனுபவித்தால் இதன் அருமை தெரியும். மக்கள் தான் வாசிப்பு பழக்கத்தை ஒழித்துக்கட்டியாயிற்றே! 86 வயது பழனிக்கவுண்டர் ஒரு அமைதியான கிராமத்தில் மனைவி இறந்தும் உள் சோகம் தெரியாமல் எனக்காக ஐந்து கூடுகளைக்கண்டு பிடித்தார். கிணறுகளின் மேலே தொங்கிக்கொண்டிருக்கும் பத்துக்கூடுகள். இந்த 86 வயது இளைஞர் அதரப்பழைய சைக்கிளில் கடக்முடக் கென பெடலை அமுக்கி கண்டு பிடித்துச்சொல்ல நான் மகிழ்ந்து போனேன். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஸ்கூட்டரில் பறந்தேன். கிணற்று மேட்டில் என் தவத்தை ஆரம்பித்தேன். பாம்பேறி என்ற பெயர் கொண்ட கிணற்று மேட்டில் பாம்பு வரலாம். இருப்பினும் புதராய் முளைத்த வேம்பு சிமிறுகளுக்குப்பின் ஒளிந்து கொண்டும், அமர்ந்தும், தென்னை மரத்தின் மீது சாய்ந்து கொண்டும் மற்றொரு கிணற்றில் கால் கடுக்க நின்றும், தொங்கநாதன்கள் வருவார்களா என காத்திருந்த கணங்களில் வீடு, மற்றும் நண்பர்கள் நினைவு ஏன் வரவில்லை ? இது யோகத்தில் தாரணா என்பதை ஒரு வகை தியானம் எனலாம். தொங்கநாதனை ஒப்பிடும் போது நமக்கு ஆபத்து குறைவு தான். வேலி ஓணான், பாம்பு, பருந்து, அணில், மைனா என முட்டை, குஞ்சுகளை சுவைத்து பசியாற்றிடக்காத்திருக்கும் உயிரிகளைக் காணமுடிந்தது. என்ன விறுவிறுப்பான தொங்கநாதன் வாழ்க்கை! கழுத்தில் தொலைநோக்கி, காமிரா என மாலைகள். மாற்றி, மாற்றி பார்த்து, காத்திருப்பு முடிவற்றது. தொங்கநாதர்ளே! என்னைப்பார்த்து பயம் ஏன்? நான் உங்கள் நண்பனல்லவா! உங்கள் வாழ்க்கை வரலாறு எழுதும் ஏழை எழுத்தாளன். நாதர்களைச்சுற்றி மைனா, வேலிஓணான், அணில், வெண்தொண்டை தினைக்குருவி, கருப்புத்தலை தினைக்குருவி, தேனிபிடிச்சான், சிட்டுக்குருவி என இருந்தன. இதனை நெசவாளிக்குருவி என அழைக்கலாம் என நினைக்கிறேன். மூக்கு ஊசி போல இருந்து தன் கூட்டை நெய்கிறது. கரும்புத்தோகை, நெல் தோகை, சோளத்தோகை, தென்னை ஓலைகளை வெகு சன்னமாக அலகால் இரண்டு அடி கிழித்து வந்து தன் வீட்டை நெய்கிறது. அதற்காக மேற்ச்சொன்ன விளைச்சல் பூமிகளுக்கருகில் உள்ள கிணறுகளில் கூடுகட்டுகிறது.கிணறு ஓரம் வளர்ந்து, கிணற்றுக்குள் சிமிறுகள் தொங்கும் வேம்பு, அத்தி, சீனிப்புளி என்ற மரங்களில் தொங்கும் வீடுகள். வசந்த மாளிகைகளைப்பார்க்க  புலர்ந்தும் புலராத காலைப்பொழுது ஸ்கூட்டர் பறக்கும். பிறகு கிணற்று மேட்டில் தவம். காற்றில் ஆடும் மாளிகைகள். இறைவனை நினைக்க எனக்கு வியப்பு கடல் அளவை விட விரிந்து போகும் தோழி!..........தொடரும்