Friday, May 15, 2015


காரில் ஒரு உலா


White spotted Fantail Flycatcher- photo-Chinna Sathan

Great Pied Hornbill-photo: R. Vijayakumar

Malabar Pied Hornbill-photo-R. Vijayakumar

உலா போய் ரொம்ப நாளாயிற்று என்று நண்பர்கள் நான்கு பேர் கிளம்பினோம். மூர்த்தி சார், துரை பாஸ்கர், விஜயகுமார், என்னையும் சேர்த்து நான்கு பேர் கிளம்பினோம். நல்ல சீதளமும், உஷ்ணமும் நிலவிய நாளில் மாருதி அல்டோவில் சென்றோம். காரமடை, வெள்ளியங்காடு, முள்ளி, அத்திக்கடவு, கெத்தை, லவ்டேல் மார்க்கமாக குன்னூர், பிறகு மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு வந்தோம். அத்திக்கடவில் Greater Hornbill, Malabar Hornbill, Green pigeon பார்த்து சொக்கிப்போய்விட்டேன். உப்புமா சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஹார்ன்பில் ராஜன்(இவர் அத்திக்கடவு பகுதியில் கைடு) ஓடி வந்து அழைக்க, உப்புமா கையோடு ஓடிப்போய் அரசமரத்துப்பழம் உண்ணவந்த பெரிய இருவாச்சியைப்பார்த்து ரசித்தோம். என்ன பரிமாணம்! மஞ்சள், கருப்பு, இரண்டு அலகு போல இறைவன் படைப்பு என்னவென்று மெச்சுவேன்! பறக்கும் போது எலிகாப்டர் போல சப்தம்.இரண்டு இருவாச்சிகள் பார்த்ததில் எங்களுக்கு ஏக சந்தோஷம். இது அதிஷ்டகரமான நிகழ்வு.
காருக்குள் சிக்கடா வந்து சிறிது நேரம் பின்புற கண்ணாடியில் அமர்ந்திருந்தது விந்தை. இது தான் ‘உய்உய்’ என காடுகளில் ஓயாமல் ஒலி எழுப்புவது. நாங்கள் சென்ற காலத்தில் மழை விடாமல் பெய்த காலம். எங்கு பார்த்தாலும் பச்சைபசேல் பசுமை. அத்திபழங்கள் பெரிது பெரிதாக பாதையில் கிடக்க அதைச் சுவைத்தேன். குரங்குகள் அத்தி மரத்தில் இருந்தன. அவைகளுடன் நான் போட்டியல்லை. பச்சைப்பின்புலத்தில் நீலநிறத்தில் பூத்துக்குலுங்கும் ஜக்கரண்டா மலர்களில் சொக்கிப்போனேன். மலர்கள் எனது காமெராவுக்குள்ளும் பூத்துக்குலுங்கின. விதைகளை எதோ தங்கக்காசுகளைப்பொருக்குவது போல பொருக்கினேன்.
சிம்ஸ் பூங்காவில் எங்களை விந்தையில் ஆழ்த்தியது White spotted fantail flycatcher. எங்கள் நால்வரையும் ஒரு மணிப்பொழுது தாரணா எனும் தியானத்தில் இருத்தியது. இயற்கை அப்படி ஒரு வல்லமை வாய்ந்தது. மனதும், பார்வையும் அந்த பறவையையே கண்காணித்தது. பூச்சி பிடிப்பதில் வேகம். மரத்துக்கு மரம் தாவி, வாடிய இலைகளைப்புரட்டி, மரத்தண்டுகளில் வலம் வந்து எங்களை புகைப்படம் எடுக்க விடாமல் பாடாய்ப்படுத்தியது.அது ஒவ்வொரு முறையும் பூச்சி பிடிக்கும் போதும் வாலை விசிறி மாதிரி விரிப்பது பூச்சிளை இருக்கும் இடத்திலிருந்து அசையவைத்து, பிறகு பிடிக்க வசதியாக இருக்கும் என்பதற்காக இருக்கும் என்பதை Dr. சலிம் அலியும், ரிச்சர்டு கிரிம்மட்டும் சொல்லாததை எனது வலைப்பூவில் பதிவு செய்கிறேன். இரண்டு வகையானவை இதில் உண்டு. 1. Whitebrowed Fantail flycatcher 2. Whitespotted Fantail Flycatcher. இதில் இரண்டாவது வகை என நண்பர் விஜயகுமார், தான் எடுத்த புகைப்படத்தில் கண்டு பிடித்துச் சொன்னார்.
சிம்ஸ் பார்க்கில் எங்களுக்கு மேலும் விருந்தளித்த பறவைகள்;- Grey tit, White eye, Black bird, Tickell’s Blue Flycatcher. வெண்மார்புக்கோழியை நீந்தி நான் ரசித்ததில்லை. அழகு தோழா!இயற்கை எனக்கு எல்லையில்லா இன்பத்தைத்தருகிறது.
பொறையுடைய பூமி நீரானாய் போற்றி
பூதப்படையாள் புனிதா போற்றி……….அப்பர் தேவாரம்.

Friday, May 1, 2015


என்னை வியப்பில் ஆழ்த்தும் பறவைகள்


Coppersmith Barbet ready to carry refuses of Chicks in its' beak

Purple Moorhen hurriedly swimming due to parisal.

          நீலக்கோழி(Purple Moorhen) நீந்துமா நீந்தாதா என பல வருஷங்கள் என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. பால்பாண்டியிடம் கேட்ட போது, “அது நிர்பந்தம் வந்தால் நீந்தி அடுத்த திட்டுக்குப்போகும்என்றார். அது நீந்தும் அழகைப்பார்க்க எனக்கு வெகு நாள் ஆவா. பரிமாணம் பெரியது. நீந்தினால் அழகாக இருக்கும். அதன் நிறம் நீலம் ஒரு வித்தியாசமான நிறம். பல காத்திருப்புக்குப்பின் அது நிர்பந்தத்தில் நீந்தும் அழகைப்பார்த்து ரசித்தேன். ஆபத்து என வரும் போது மேலும் ஒரு திட்டுக்குப்போக நினைக்கும் போது நீலக்கோழி நீந்தும். இதை விட இது மூழ்கி சிறிது தூரம் நீந்திப் போய், நீர்காகம் மாதிரி நீர்மட்டத்தில் எழுமா? என நான் பால் பாண்டியைக்கேட்கவில்லை. அது எனக்குத்தோன்றவில்லை.
   ஒரு நாள் பறவை நோக்கலில் ஈடுபட்டிருக்கும் போது, பரிசல்காரன் பரிசலில் மீன் பிடிக்கக் கிளம்பினான். அப்போடு குறுக்கே வந்து விட்ட நீலக்கோழி பரிசலுக்கு தப்பிக்க நீரில் மூழ்கி சிறிது தூரம் சென்று பின் நீர் மட்டத்தில் எழுந்து நீந்திப்போனது. நான் ஒரு நிமிஷம் ஆடிப்போய் விட்டேன். நீலக்கோழி மூழ்கி இறந்து விட்டதா என ஐயம் எழ சில வினாடிகளில் நீர் மட்டத்தில் தலை தெரிய நிம்மதி அடைந்தேன். அது அருகில் உள்ள ஆகாசத்தாமரைபரப்புக்குச்சென்றது. ஆபத்து என்றால் நீரில் மூழ்கி நீந்தி, எழுந்து மீண்டும் நீந்துகிறது.
பல விஷயங்கள் அதாவது பறவைகளின் குணாதிசயங்கள் இன்னும் பதிவு செய்யக்கூடியவை நிறைய உள்ளன. Dr. சலீம் அலி நூலில் பதிவு செய்யப்படாததை நான் பதிவு செய்கிறேன். எனக்கு அரசு அல்லது மற்ற அமைப்புகள் நூல் வெளியிட உதவுவதும் இல்லை. அப்படி நான் வெளியிட்டாலும் அதை பள்ளி, கல்லூரிகள் வாங்கத்தயக்கம் காட்டுகின்றனர். அரசு நூலகங்களில் தேர்வு செய்வதில் ஊழல் வேறு
      குக்குறுவான்(CoppersmithBarbet) மரஓட்டைகூட்டில்முட்டையிட்டுக்குஞ்சுபொரித்தாலும், அடிக்கடி அந்தமரக்கூட்டில் வந்து, தலையை வெளியில் தொங்கவிட்டவாறு ஓய்வெடுக்கிறது. கூட்டை சுத்தம் செய்யாது என பால்பாண்டி சொன்னது தவறானது. குக்குறுவான் சுத்தம் செய்கிறது. சுத்தம் செய்யாவிடில் இரு குஞ்சுகள் தங்க இடமில்லாதுபோகும். குஞ்சுகளின் கழிவுகளை அலகில் சுமந்து கொண்டு சற்று தூரம் பறந்து நழுவ விடுகிறது.


எனது நூலில் “Diary on the nesting behavior of Indian Birds”இவைகளை சேர்க்க வேண்டும். அடுத்த பதிப்பு வந்தால் சேர்ப்பேன். முதல் பதிப்பை விற்கவே வழியில்லை. மக்கள் வாசிப்பது குறைந்து, அலைபேசிக்கு அடிமையாகி விட்டனர். ரயிலில் பாதிப்பேர் காதுகளில் ஒயர் தொங்குகிறது. மீதிப்பேர் ஐப்பேட், லேப்டாப் சகிதம். மக்கள் செவிப்புலனையும், கண்பார்வையையும் தாறுமாறாக உபயோகித்தல் தீங்கை விளைவிக்கப்போவது உறுதி. யாராவது கையில் புத்தகம் இருக்கிறதா? நூல்கள் வாசிக்காதவன் அரைமனிதன். அவன் வாசிப்பு சுகத்தை இழந்தவன். யாருக்கும் எதையும் சொல்ல முடியுமா அவனால்?