Tuesday, July 28, 2015


தொங்கநாதன்……..2

காய்ந்த குளத்து கருவேல மரத்தில் தொங்கும் ஒற்றைக்கூடு


                தொங்கநாதன் எனும் தூக்கணாங்குருவி கருவேல மரம் அடர்ந்த காய்ந்து போன குளத்தில் உள்ள நான்கு மரங்களில் தொங்கநாதன் கூடு தொங்க விட்டுருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் அதுவும் முழுமையடையாமல் இருந்தன. பத்தடி உயரத்தில் மரத்துக்கு ஒன்றாகத்தொங்கின.இது எனக்கு பேராச்சர்யமாக இருந்தது. இது வரை நான் கண்டது கூடுகள் நீரோடும் ஆற்றுக்கு மேல் அல்லது கிணற்றுக்கு நடுவில் தொங்கிக்கொண்டிருக்கும். வேம்பு, அத்தி, சீனிப்புளி போன்ற கரையிலுள்ள மரங்களில் இருந்து யாரும் தொடமுடியாத நிலையில் நீருக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும். வரண்ட குளத்தில் கருவேலமரத்தில் ஒற்றை அரைகுறை கூடுகளைப்பார்த்த போது இது புது கண்டுபிடிப்பு தாம் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். இது வரை பதிவாகாத செய்தி. ஒருவேளை கிணற்றின் நடுவில் கட்டுவதற்கு முன் இந்த மாதிரி இடத்தில் கட்டிப்பழகுவதாகக்கூட இருக்கலாம். வெண்தொண்டை தினைக்குருவி தொங்கநாதன் குஞ்சு பொரித்து விட்ட கூடுகளை தன் இனப்பெருக்கத்துக்கு உபயோகிப்பது பற்றி டாக்டர் சலீம் அலி பதிவு செய்திருக்கிறார். அத்தோடு எனது Diary on the nesting behavior of Indian Birds நூலில் சிட்டுக்குருவியும் இந்த தினைக்குருவி போல எல்லாம் முடிந்து போன வெற்றுக்கூட்டை தன் இனப்பெருக்கத்துக்கு பயன் படுத்துவதை பதிவு செய்துள்ளோம். இப்போது மேலும் ஒரு செய்தி என்னவெனில், வெண்தொண்டை தினைக்குருவி முட்டைகளுக்கு மெத்தை வைக்க உதிர்ந்த இறகை தனது வாயில் கவ்விச்சென்றதை கண்ணுற்றேன். தினைக்குருவிகள் மற்றும் சிட்டுக்குருவிகள் கூட்டை கைப்பற்ற வரும் போது தொங்கநாதன் அவைகளைத்துரத்தி அடிக்கின்றன. அணில் கூடுகளுக்குப்பக்கம் சுற்றுவது முட்டை, குஞ்சுகளை கைப்பற்றத்தான் என்பது தெளிவு. தொங்கநாதன் தானியங்களையும், பூச்சிகளையும் தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவது அதன் அலகில் சிக்குண்டு இருப்பதை வைத்து பதிவு செய்ய முடிகிறது. தினைக்கருவிகள் பல கூட்டில் குடியேறுவதற்கு முன்பு அதை சுற்றி பார்வையிடுகின்றன. ஒன்றிரண்டு கூடுகள் இரட்டையாக பின்னப்பட்டு ஒன்றிலிருந்து இன்னொன்று தொங்குகிறது.சாதாரணமாக ஒன்னரையடியாக இருந்தால் இந்தக்கூடு மூன்றடியாக உள்ளது. அருகிலிருக்கும் தென்னை மரத்தின் ஓலை, சோளத்தட்டின் ஓலை என இவற்றை அலகில் பூக்கட்டக்கிழிக்கும் நாறு போல கிழித்து அலகில் கூட்டைப்பின்னலிட்டு நெய்வது கண்கொள்ளாத காட்சி.கூட்டின் அருகில் கருந்தலை தினைக்குருவிகளைக்கண்டேன். சிட்டுக்குருவி. மைனா கிணற்றுக்குள் போய், வந்து கொண்டிருக்கிறது. அது கிணற்றுச்சுவர் பிளவுகளில் முட்டை வைக்கும். அது கண்ணில் பட வில்லை. அமைதியான கிராமத்து 86 வயது பழனிக்கவுண்டர் மனைவியை இழந்தவர், எனக்காக கூட்டை நான்கு கிணறுகளில் கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை நெகிழ வைத்தது. பழைய துறுப்பிடித்த சைக்கிளில் காற்றுடன் போராடி பெடலை அமுக்கி தெற்கும் வடக்கும் அலைந்து கண்டு பிடித்துக்கொடுத்தது என்னை வியப்புக்குள் தள்ளியது. ……………..தொடரும்.


No comments:

Post a Comment