Wednesday, March 18, 2015


                                       பெருமாள் ஐயா

Red wattled Lapwing

Wood pecker (பெருமாள் ஐயா ஓவியங்கள்)

L to R Dr. K. Ratnam, Arulagam Bharathi Dasan and Perumal Sir



பெருமாள் ஐயா
                இவர் திடீரென பறவை சித்தர் Dr. ரத்னம் ஐயா மூலமாக எனக்கு அறிமுகமானார். ரத்னம் சார் வீட்டில் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அண்ணாருக்கு வயது அப்போது 75 இருக்கும். பெருமாள் ஐயா வருகிறார் அவர் எனக்கு மூத்தவராக இருப்பார், நீ போய் பஸ் நிறுத்தம் போய் அழைத்து வா, அவருக்கு வீடு தெரியாது, தற்போது பொள்ளாச்சியிலிருந்து வருகிறார் எனப் பணித்தார். முன்பின் தெரியாதவர் இருப்பினும் அவரைப் பார்த்ததும் அடையாளம் காணலாம். நல்ல சிகப்பு, தாடி வைத்திருப்பார். கண்ணாடி மற்றும் குல்லாய் அணிந்திருப்பார். அவரை சுலபமாக அடையாளம் கண்டு ரத்னம் ஐயா இல்லம் அழைத்து வந்தேன்.
முக்கால் மணி பேசிக்கொண்டிருந்தோம். இரவு உணவும், தங்கலும் எனது இல்லத்துக்கு வருகிறேன் எனச்சொன்னது உண்மையில் எனது பாக்யம். கல்கத்தா சாந்தி நிகேதனில் இருந்து ஓவியங்களை சுவற்றில் தீட்டி பல நன்னெறிகளைப்பரப்பியவர். நல்ல ஓவியர், கூட     எழுத்தாளரும் ஆவார். ரபீந்தராநாத் தாகூருக்கு மாணவர். பிறகு சாந்தி நிகேதனில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். சில நன்னெறி நூல்களை எழுதி, அவரே செலவிட்டு வெளியுட்டுள்ளார். இரு நூல்களை நான் கேட்காமலேயே எனக்குத்தந்தார். அதில் ஒன்று சிந்தனைக்கதிர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
           வீட்டுக்கு அழைத்து வந்தேன். மனைவி என் பிள்ளைகள் அவரைச்சுற்றி அமர்ந்து கொண்டு இரவு நல்ல நெறிகளை அவர் வாயிலாகக் கேட்டோம். மறுநாள் சின்னார் உலாப்போவதாகத்திட்டம். நான் கார் ஏற்பாடு செய்திருந்தேன். அதிகாலை பெருமாள் ஐயா, ரத்னம் ஐயா, நண்பர் பாரதி தாசன் (அருளகம் NGO) மற்றும் நான் சின்னார் சென்றோம். சின்னார் நெருங்கும் போது ஒரு பின் நீர் நிலை வசிகரமாக நம்மை மயக்கும். அங்கு காரை நிறுத்தி, இறங்கி இயற்கையை ரசித்தோம். பெருமாள் ஐயா உடனே சிறு டயரியில் பென்சிலால் அந்தக்காட்சியை வரைந்தார். இதற்கு அவருக்கு லேசாக கை நடுக்கமிருந்த்து. என்னே ஆர்வம், அதுவும் இந்த வயதில்

இயற்கையைப்பற்றிய பேச்சும், அறிவும், எழுதுவதும், ரசிப்பதும், வரைவதும் எல்லையில்லா பரவசம் உள்ளத்தில் ஏற்படுத்தும். அதில் சந்தேகமே வேண்டாம். 80 வயதை நெருங்கிக்கொண்டு இருப்பவர் யார் தயவும் இல்லாமல் நடந்தும், பஸ் ஏறியும் ஊர்விட்டு ஊர் வந்து வெளிப்படையாகப்பழகிப்பேசி,எழுத்து, ஓவியம், திறமையுடன் இயற்கையாளராக இருப்பது எனக்கு வியப்பையும், அவர் மேல் எனக்கு பெரும் மரியாதையும், மகிழ்வையும் ஏற்படுத்தின. மனைவி அவர் சென்ற பின்பு அவரைப்பற்றி சிலாகித்தாள். இவர் ஓவியங்கள் மற்றும், இவரைப்பற்றியும் இந்திரன் என்பவர் தொகுத்து வெளியிட்டுள்ளார். நல்லதொரு ஆன்மா எப்போதும் தன் சுவடுகளைப்பதிக்கத்தவருவதில்லை. அவரை சில போது நினைத்துக்கொள்வேன். தனக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ளாது சுயநலமற்று எப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார். எளிமையானவர், இனிமையானவர் இன்றும் நினைக்கின் நல்ல ஊற்றுப்பெருகி வழிகிறது.

No comments:

Post a Comment