Friday, August 15, 2014

சுற்றுச்சூழல் protect our environment (POET)

ஆடி மாதத்தில் பட்டணம்புதூர் நொய்யல் மதகு

விஷமாகிப்போன ஆறு
            பட்டணம் புதூர் மேற்குப்புறத்தில் ‘எல் அண்டு டி’ புறவழிச்சாலை பிரிவின் உள்ளே நொய்யல் ஆறு செல்கிறது. ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து வெள்ளம் புரழும். அதைப்புகைபடம் எடுக்கலாமென ஒரு நல்ல காலைப்பொழுது மஃப்ளர் கழுத்தில் சுற்றிக்கொண்டு ஸ்கூட்டரில் சென்றேன். வீட்டிலிருந்து பத்து காத தூரம் இருக்கும். ஏமாற்றமே மிஞ்சியது. என்ன செய்ய? வெள்ளம் நுங்கும் நுரையுமாகச்செல்கிறது என எழுதுவதை மாற்றி, வேதிப்பொருட்கள் கலந்த நுரை பொங்கிக்கொண்டிருந்தது. மக்கள் புலங்கிய சாக்கடை நீர் கலந்தும், செல்வபுரம் போன்ற பகுதிகளில் பொறுப்பற்ற சாயப்பட்டறை அதிபர்கள் விடும் சாய நீர் கலந்தும், நீர் மாசுபட்டு நுரைத்துக்கொண்டு மெதுவாக நகர்ந்தது.
நீரில் விஷமேற்றப்பட்டு விட்டது. இதில் தவளை, மீன், நண்டு, தண்ணீர் பாம்பு, புழுப்பூச்சிகள் எப்படி வாழும்? இதில் பிடித்த மீன் சாப்பிடும் மனிதன் கதி என்ன? அங்கிருந்த பிரிந்த ராஜவாய்க்கால் பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சுலூர், ஆச்சான் குளம் என நிரப்பப் போகும் நொய்யல்நீர் விஷமாகிக் கருப்பாகத் தெரிந்தது. ராஜவாய்கால் எனில் குளத்துக்கு நீர் கொண்டுபோகும் கால்வாய். இது போல ஒவ்வொரு குளத்துக்கும் நீர் எடுத்துப்போகும் கால்வாய்கள் ராஜ வாய்க்கால்களென புரிந்து கொள்ளவேண்டும்.இதையேன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பார்த்துக்கொண்டு மெத்தனமாக உள்ளது?
நான் அந்த மதகில் ஆச்சர்யப்பட்டு நிற்க, ஒரு பெரியவர் ‘காத்து அடிக்கப்போகுது. நுரை மேலே பட்டுதுனா உடம்பெல்லாம் அரிக்கும். இந்தப்பக்கம் வந்து விடுங்கள்’ என்றார். விலகி ஓட நுரை சர்ஃப் போல திட்டுத்திட்டாகப்பறந்தன. இங்கு காதல் பாட்டு எடுக்கலாமா? கரையோர தாவரங்களின் கதி என்ன? நீர் அருந்தும் பறவைகளின் கதி என்ன? ஏன் மனிதன் பொறுப்புணர்வு இல்லாமல் இப்படி நீரை மாசுபடுத்துகிறான். இவன் எப்போது திருந்துவான்? புகைப் படத்தைப்பாருங்கள். நெஞ்சம் தீயாக கனழ்கிறது இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்…..

இதை சீர் செய்வது எங்ஙனம்? 1. சாயப்பட்டறைகளை இழுத்து மூடுவது 2. சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் சாய நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். 3.குளத்துக்கு நீர் விடும் போது இயந்திரம் மூலமாக சுத்திகரித்து விடவேண்டும். 4. மழைக்காடுகளை உருவாக்கி நீர்வளம் பெருக்க, வேதிப்பொருட்கள் சதவீதம் குறைந்து இவ்வளவு தீமை வராது.

No comments:

Post a Comment