Sunday, March 23, 2014

 காதல் பறவைகள்
Love Birds

காதல் பறவைகள் என்று ஏன் பெயர் வந்தது எனில் அவை அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ளும். ஜோடி இல்லையெனில் இறந்து விடும். தனித்து ஒரு பறவை மட்டும் இருக்காது. வண்ண, வண்ண நிறத்தில் கண்ணையும், மனதையும் கவரக் கூடிய பறவைகள். இவை நம் நாட்டுப்பறவைகள் இல்லை. நம் நாட்டில் வளர்ப்புப் பறவைகளாக கூண்டுக்குள் தான் பார்க்கலாம். வெளியில் சுதந்திரமாக பறந்து திரிந்தால் கழுகு, பருந்துகளால் ஆபத்து. இவை ஆஸ்திரேலியப்பறவைகள். அங்கிருந்து கப்பலில் வியாபார நிமித்தம் இறக்குமதியாக, இவை இந்தியாவில் புறா மாதிரி வளர்க்கின்றனர். விற்பனை நடை பெறுகிறது. இவற்றை வீடுகள், நிறுவனங்கள் என வளர்ப்போர் உண்டு.
பறவைகளின், ஒலி(Sound therapy) மனதை சந்தோஷப்படுத்துகின்றன. உடலையும், மனதையும் ஓய்வுக்கு கொண்டு செல்கின்றன. நீலம், மஞ்சள், வெண்மை, பச்சை எனப் பல வண்ணங்களில் நம்மைக் கவருகின்றன. இவை சப்திப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கில் பறக்கும். பறக்கும் போது வேகத்துடன் பெரிய மேகம் வருவது   போல கிச், கிச் என பேரோலியுடன் வரும்.அப்போது கழுகுகள் உள்ளே பறந்து வந்து சும்மா அலகைத்திறந்து வைக்கும். ஒன்று மாட்டிக்கொள்ளும். அப்படி ஆயிரக்கணக்கில் இரையாகும்.
இவை தன் ஜோடியுடன் மிக நெருக்கமாக இருக்கும். முத்தமழை தான். அலகோடு அலகு இணைத்து அடிக்கடி முத்தம் கொடுக்கும். கூண்டிலேயே இணை சேர்ந்து முட்டை வைத்து அடை காத்துக் குஞ்சு பொரிக்கும்.ஐந்து வரை கூட வைக்கும். முட்டை ஓவல் வடிவத்தில் வெள்ளையாக இருக்கும். இதன் உணவு தினை, பொதினா கீரை, கொத்துமல்லி இலை. ஆண் அலகு அடிபாகம் சற்று நீல நிறம். பெண்ணுக்கு அலகு அடிபாகம் மஞ்சள், பிறகு வெள்ளை. பகல் முழுதும் கிச், கிச் என ஒலி எழுப்பும். மாலை ஆறு மணிக்கு மேல் நிஷப்தம். அதி காலையில் மீண்டும் ஒலி எழுப்ப ஆரம்பித்து விடும். கூண்டுக்குள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டும், ஊஞ்சலில் ஆடியும், தன் ஜோடியோடு நெருங்கி அமர்ந்தும், கண்ணை உருட்டிப்பார்த்துக் கொண்டும், தனது அறையான மண் சட்டி அல்லது மரப்பெட்டி போய் வந்து கொண்டுமிருக்கும் .
முட்டை (குறுமட்டை) வலுவிழந்ததாக இருப்பின் அதை உணர்ந்து கீழே தள்ளி விட்டு விடும். அது உடைந்து நொறுங்கும். ஜோடி என்பது குறிப்பாக ஒன்றுடன் மட்டுமே இருப்பதில்லை. (Polygamy). மலட்டுத்தன்மையோடு இருக்கும் ஒரு காதல் பறவை தனது சக பறவையின் குஞ்சுகள் ஒன்றிரண்டை கொன்று விடுவதை பார்க்க முடிகிறது. ஊனமாகப்பிறந்த பறவை சாகவேண்டியது தான். சரிவரப்பறந்து கூட்டுக்குள் இருக்கும் மண்சட்டி அல்லது மரப்பெட்டிக்கு வர முடியவில்லையானால் தளமட்டத்தில் இருக்கும். அதிக நடமாட்டமில்லையெனில் எறும்புகள் கபளிகரம் செய்து விடும். குஞ்சுகளுக்கு தாய் பறவை தினை ஊட்டும்.அடைகாப்பது இரண்டு வாரம். இவற்றுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு. இவை வாழ்வதோடு மாநிடரை சந்தோஷப்படுத்தவும் செய்கின்றன.


No comments:

Post a Comment